
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவேண்டும் என்று தகவல் தொடர்பில் தமது பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமது மறுப்பை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த தமக்கு ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை முற்றுகையிடும் வகையில் மக்களை திரட்டமுடியாது என்றும் அவர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.
2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக தாம் நியமிக்கப்பட்டமையானது, அனைவருக்கும் தெரிந்தவிடயம்.
கொலைக்காரர்களுடன் இருந்தமை தொடர்பில் தாம் ஏற்கனவே மன்னிப்பை கோரியுள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
எனினும் பிள்ளையான் 600 பொலிஸாரை கொலை செய்தமை தொடர்பில் தமது பெயரையும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை பொருத்தமற்றதாகும்.
ஏனெனில் இந்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் தாம் பிறந்திருக்கவில்லை என்றும் சாணக்கியன் தெரிவித்தார்.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு அர்ஜூன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக்கி அதன் மூலம் பாரிய மோசடிக்கு ரணில் விக்கிரமசி்ங்க வழிவகுத்தார் என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.
அத்துடன் அவரின் உறவினரான அலோசியஸின் மெண்டிஸ் நிறுவனத்துக்கு 3.5 பில்லியன் ரூபா வங்கி ஒன்றிடம் கடன் உள்ளது.
எனவே அதனை மீண்டும் கொண்டு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க உதவவேண்டும் என்று சாணக்கியன் கேட்டுக்கொண்டார்
எனவே அவரும் இன்றைய நாட்டின் நிலைக்கு காரணம் என்று சாணக்கியன் குறிப்பிட்டார்.
இதற்காக கோ ஹோம் ரணில் என்ற அடிப்படையில் மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
அவர் தற்போது மீண்டும் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றுக்கு வந்துள்ளார் என்று சாணக்கியன் தெரிவித்தார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் முஸம்மில் தொடர்பில் கருத்துரைத்த சாணக்கியன், முஸம்மிலை போன்று தாம் புண்ணியத்துக்காக நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
எனினும் தாம் பொதுமக்களால் தொிவுசெய்யப்பட்டவன் என்று சாணக்கியன் தெரிவித்தார்
இந்தநிலையில் ஏன் விமல் வீரவன்சவும் உத்திக பிரேமரட்னவும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது தொடர்பில் அவர் கேள்வி எழுப்பினார்.