கொழும்பு,மே 06
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி இலங்கை முழுவதும் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச, தனியார் துறைகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.
இதற்கு வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வர்த்தகர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதனால் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதுடன், நகரங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, தனியார் பஸ் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. அத்துடன் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று இ.போ.ச. பஸ் சங்கங்கள் சில போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேவேளை, இன்றைய ஹர்த்தாலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாட்டின் பல இடங்களில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் தலவாக்கலை நகரிலும் பிரதேச மக்களால் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

புத்தளத்திலுள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு, நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு தமது முழுமைiயான ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை மேற்கொண்டிருந்தனர்.

நாடு பூராகவும் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான பூரண ஹர்த்தால் கிண்ணியாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஹர்த்தால் காரணமாக வெள்ளிக்கிழமை கிண்ணியாவிலும் கடைகள் மூடப்பட்டு மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கினர்.
