அமைச்சரின் மருமகன் என கூறி பல லட்சம் பணமோசடி செய்த நபர்

மும்பை,மே 06

மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசில் ஆற்றல் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் ராவத்.  இவரது மருமகன் என கூறி கொண்டு, அதனடிப்படையில் மின் துறையில் வேலை வாங்கி தருகிறேன் என சந்தீப் ராவத் என்பவர் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

இதன்படி மும்பை, ரத்னகிரி, பால்கர் மற்றும் தானே ஆகிய நகரங்களில் வசிக்கும் மக்களிடம் தலா ரூ.1 லட்சம் என 11 பேரிடம் அவர் மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

இதுபற்றி மகேஷ் கஜாவே என்பவர் தாதர் நகர பொலிஸில் புகார் அளித்து உள்ளார்.  அதன்பேரில், பொலிஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

கஜாவே தனது புகாரில், தனது மகள் மற்றும் மகனுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் மின் துறையில் வேலை வாங்கி தருகிறேன் என சந்தீப் தன்னிடம் உறுதி கூறினார்.  இதற்காக ரூ.1 லட்சம் பணமும் கொடுத்துள்ளார்.

இதன்பின் விரைவு அஞ்சல் வழியே கஜாவேக்கு இரண்டு பணி நியமன கடிதங்கள் மின் துறையிடம் இருந்து வந்துள்ளன.  கடந்த மார்ச் 30ந்தேதி, தனது மகன் மற்றும் மகளுடன் கஜாவே, பந்திரா கிழக்கு பகுதியில் உள்ள மின் துறை தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த அதிகாரிகளிடம் பணி நியமன கடிதங்களை கொடுத்துள்ளார்.  ஆனால், அவை போலியானவை என்று அதிகாரிகள் அவரிடம் கூறியுள்ளனர்.  இதனால், அதிர்ச்சி அடைந்த கஜாவே திரும்பி வந்துள்ளார்.

இதுபோன்று பலரிடம் சந்தீப் பணமோசடியில் ஈடுபட்டு உள்ளார் என தெரிய வந்துள்ளது.  அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.  தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *