ஜெய்ஸ்வால் அதிரடி: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பை, மே 07

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான சனிக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.

தவன் 12 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ அரைசதம் கடந்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ராஜபக்சே 27 ரன்னிலும், கேப்டன் மயங்க் அகர்வால் 15 ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில் ஜிதேஷ் சர்மா (38) அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் சஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பட்லர் 16 பந்துகளில் 30 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்னிலும், படிக்கல் 31 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்பை அளித்த அவர், 68 ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் ஹெட்மையர்(31) அதிரடியுடன் விளையாடி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துவைத்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும்  இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *