திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு அட்டூழியம்!

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலயத்திற்குள் உள்நுழைந்த இளைஞர்குழு நேற்று முன்தினம் இரவும் நேற்று பகலிலும் தாக்குதல் நடாத்தியதில் குருக்கள் ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆலயத்தின் காணியின் கடற்கரை பகுதியில் இரவில் இளைஞர் குழு ஒன்று போதைவஸ்து பாவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆலயத்தினரிடம் பொலிசார் உங்கள் ஆலயத்தின் கடற்கரை எல்லை பகுதியில் இளைஞர் குழு ஒன்று போதைவஸ்து பாவித்துவருவதாகவும் அவர்களுடன் உங்களையும் கைது செய்யப்படுவீர்கள் எனவும் உங்கள் ஆலய எல்லை வேலியை அமைக்குமாறு தெரிவித்தனர்.

இதன்அடிப்படையில் ஆலய நிர்வாகம் ஆலயத்தை சுற்றி மதில் அமைத்துவருகின்றனர்.

இதன் போது குறித்த இளைஞர் குழுவினர் தொடர்ந்து மதில் அமைப்பதற்கு இடையூறு விளைவித்து வந்ததுடன் கட்டிய மதிலின் ஒரு பகுதியை உடைத்துள்ளனர்.

இந்நிலையில் கோவில் கோபுரம் அமைத்துவரும் வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆச்சாரியர்கள் இருவர் சம்பவதினமான வியாழக்கிழமை இரவு கடற்கரை பகுதியில் அமர்ந்து இருந்த போது அங்கு திடீரென வந்த குறித்த இளைஞர்குழு அவர்கள் மீது பொல்லுகளால் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதில் காயமடைந்த இரு ஆச்சாரியர்களையும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இவ்வாறான நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை காலையில் கோவிலுக்குள் உள்நுழைந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் குருக்கள் ஒருவரும் அங்கு தொண்டு செய்துவரும் இளைஞன் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலை நடாத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *