கேரளாவில் புதுவகை வைரஸ் பரவல்: 85 குழந்தைகளுக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்,மே 08

கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்தது.

இதை தொடர்ந்து இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதார துறை அதிகாரிகள் முகாமிட்டு நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் பொதுமக்களிடம் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதார துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *