திருகோணமலை – திம்பிரிவெவ பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபரொருவர் பாம்பு தீண்டி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுனில் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தொழில் நிமித்தம் காரணமாக மாத்தளையில் இருந்து வருகை தந்து கடந்த ஆறு வருடங்களாக மஹதிவுல்வெவ பிரதேசத்தில் உள்ள வயல் காவல் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வயலுக்குள் நுழைந்த யானையை விரட்டுவதற்காக சென்றபோது அவரை பாம்பு தீண்டிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் இதன் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.