பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமா? நாளை வருகிறது ஐரோப்பிய குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூதுக் குழுவினர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளனர்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட அரசாங்கப் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிரணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இலங்கை அரசாங்கமானது 2017ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.

அதன் பின்னர் கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா? இல்லையா? என்று மேற்படி ஐவர் கொண்ட குழு அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் சம்பந்தமாக அமைத்துள்ள குழுக்களின் செயற்பாடுகளையும் அவற்றின் அறிக்கைளையும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவிடத்தில் வெளிப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *