
நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அமுல்படுத்தியுள்ளார்.
அவசரகாலச்சட்டம் அமுல் படுத்தப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) அவசரகாலச் சட்டம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்குத் தீர்வாகாது என PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களின் உயிரைப் பாதுகாப்பதனையே முதன்மைப் பொறுப்பாகக் கொண்ட அரசாங்கம் அண்மைக்காலமாக பொறுப்பற்ற தீர்மானங்களையே மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், குறித்த தீர்மானங்களின் ஊடாக நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை உருவாக்கி, அடக்குமுறைச் சட்டங்களை கொண்டுவருவது கேலிக்கூத்தானது என தாம் நம்புவதாகவும் PAFFREL அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று எட்டப்படவில்லை எனவும் PAFFREL அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் கூட்டப்பட்டுள்ள போதும், மக்கள் பிரதிநிதிகள் வாதப்பிரதிநிதிகளை நடாத்துவதனையும், கூச்சலிடுவதனையும் தவிர, சாதகமான பதில்களை வழங்கத் தவறியுள்ளமையானது வருந்தத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இராஜதந்திரிகள் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளதாகவும் PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியினர் நேர்மையாக செயற்பட வேண்டுமெனவும், அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த வேண்டாமெனவும் PAFFREL அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.