நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இன்று மிகத் தீவிரமடைந்துள்ளது.
இன்று காலை கொழும்பு அலரி மாளிகைக்கு முன்னால் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சவை விலக வேண்டாம் எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேவேளை அலரிமாளிகைக்கு முன் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம கூடாரங்கள் அரச ஆதரவாளர்களால் தாக்கி அழிக்கப்பட்டது.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரச ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு குறித்த சம்பவத்தில் ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னாள் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் இன்று ஒரு மாதத்தை எட்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் சற்றுமுன் காலிமுகத்திடல் கோட்டா கோ பகுதிக்குள் உள்நுழைந்த அரச தரப்பு ஆதரவாளர்களால் கோட்டா கோ கம கூடாரங்கள் தாக்கி அழிக்கப்பட்டதால் பரபரப்பான நிலை தோன்றியது.
இதேவேளை குறித்த பகுதியில் பதற்றமான நிலை தோன்றியுள்ளதுடன் குறித்த பகுதிக்கு ஏராளமான பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

