வவுனியாவில் வசிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோரது வீடுகளுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது கொழும்பில் மேற்கொண்ட தாக்குதலையடுத்து நாடு பூராகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும், அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் வன்முறைகள் ஏற்பட்டதுடன், பலரது வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் இரவிரவாக தீயிட்டு எரிக்கப்பட்டன.
இதனையடுத்து வவுனியாவில் வசித்து வரும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் கிராமிய அபிவிருத்தி மற்றும் பயிர்செய்கை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் ஈபிடிபியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் ஆகிய இருவரதும் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் என்பவற்றுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மேலதிகமாக, இரவிரவாக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 561 ஆவது படைப் பிரிவினர் குறித்த இருவரதும் வீடுகள் மற்றும் அலுவலங்களுக்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

