தமிழினத்தை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் உதவக்கூடாது! – தர்மலிங்கம் சுரேஸ்

இந்த நாட்டுக்கு மீண்டும் மீண்டும் கடன்களை வழங்கி தமிழினத்தை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் உதவக்கூடாது. இந்தவேளையில் இங்கு நடைபெற்ற இன அழிப்புகான நீதிவிசாரணைக்கான அழுத்தங்களை சர்வதேசம் வழங்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பினை வெளிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்கீழ் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை நடைபெற்ற மகிழடித்தீவு சந்தியில் உள்ள கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி முற்றத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், முள்ளிவாய்க்கால் பேரவல காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில், இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்கால் உட்பட அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்ற படுகொலைகளில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சிகள் மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் தொடர்பில் கருத்துகளும் பரிமாறப்பட்டன. இந்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *