நாட்டில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்ற சிறைக் கைதிகளை, கூடிய விரைவில் சரணடையுமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
வன்முறை தினத்தன்று கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளை தலங்க பிரதேசத்தில் மறித்த கும்பலொன்று, அதிலிருந்த கைதிகள், அவர்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியது.
கைதிகளுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டட நிர்மாண வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 181 கைதிகள், மீண்டும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
அதன்போது, தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக 58 சிறைக்கைதிகள் அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர், தப்பியோடிய கைதிகளில் 32 பேர் மீண்டும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு சென்று சரணடைந்துள்ளனர். இதன்படி மேலும் 26 கைதிகள் இன்னமும் சரணடையாதுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை சரணடையாத கைதிகளை, விரைவில் வட்டரெக்க சிறைச்சாலைக்கு திரும்புமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறில்லையாயின், அருகில் உள்ள சிறைச்சாலை அல்லது காவல் நிலையத்தில் சரணடையுமாறு அல்லது 0114 677 177 அல்லது 0114 677 517 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு சிறைச்சாலை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.