மைத்திரி செய்த சூழ்ச்சியையே கோட்டா தற்போது செய்துள்ளார்! – ஜே.வி.பி.

நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன செய்த சூழ்ச்சியையே தற்போது கோட்டாபய ராஜபக்ஷவும் செய்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்களின் குரல், போராட்டங்கள் என எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

எனவே இது செல்லுபடியற்ற நியமனமாகும். பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கான வாக்குகளைக் கூட தேர்தலில் பெற்றுக் கொள்ள முடியாத மக்கள் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, எவ்வாறு பிரதமராக பதவியேற்க முடியும்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவரை ஒருவர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் அவர்கள் இருவரையுமே நம்பவில்லை.

2018 நல்லாட்சி அரசாங்கத்தின் போது மைத்திரிபால சிறிசேன செய்த சூழ்ச்சியையே கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போது செய்துள்ளார். இவை ஜனநாயக விரோத செயற்பாடுகளாகும்.

ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை தடுப்பதற்காகவே மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆணையை வழங்கினர். ஆனால் அவர் மக்கள் ஆணைக்குழு முரணாகவே இன்று செயற்படுகிறார். இது தோற்கடிக்கப்படவேண்டிய அரசியல் கலாசாரமாகும். ரணில் விக்கிரமசிங்க எப்போதும் ராஜபக்ஷாக்களிக் பாதுகாவலராகவே செயற்படுவார்.

மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்ததன் விளைவாகவே இன்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடற்படை முகாமில் மறைந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே ராஜபக்ஷாக்களையும் ரணில் விக்கிரமசிங்கவையும் ஒருமித்து தோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்கு புதியதொரு பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

தற்போது ரணில் மேற்புறமாக இருந்தாலும் உட்புறமாக பசில் ராஜபக்ஷவே உள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளை ரணில் ஆரம்பித்துள்ளார். அதன் மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை திரட்ட முற்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சுயம்வரத்தில் மணப்பெண் தனது மணவாளனை தெரிவு செய்து மாலையிடச் செல்லும் இறுதி நேரத்தில் நானும் சுயம்வரத்தில் கலந்து கொள்கின்றேன் என்று அறிவிப்பதைப் போலவே சஜித்தின் செயற்பாடு அமைந்துள்ளது. அதைப் பற்றி பேசுவது பிரயோசனமற்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *