புதிய அமைச்சரவையுடன் ராஜபக்சர்களுக்கு தொடர்பிருக்காது! வெளியான தகவல்

புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நியமிக்கப்படும். அத்துடன் அது, குறிப்பிட்ட காலத்திற்கு நாட்டை கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்படும் அமைச்சரவையாகவே அமையும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சிறப்புரிமைகள் வழங்கப்படாது என்று தெரிவித்தார்

அமைச்சரவை பல கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், விவாதங்களின் பின்னர் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பொறிமுறையை அந்த அமைச்சரவை முன்வைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் என்பன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வரும் அரசாங்கத்திற்கு உதவ மறுத்துள்ளன.

இந்தநிலையிலும் நாடாளுமன்றத்திற்குள் பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்த முடியும் என்று காரியவசம் தெரிவித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அல்லது ஜனாதிபதி ஆகியோருக்கு இந்த செயற்பாடுகளில் தொடர்பிருக்காது என்றும் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *