உயிரிழந்த ஆளும் தரப்பு எம்.பியின் பிரேத பரிசோதனை அறிக்கையால் பரபரப்பு!

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் கடந்த திங்கள்கிழமை(09) ஏற்பட்ட அமைதியின்மையின் போது நிட்டம்புவ பிரதேசத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து எம்.பி கட்டிடமொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பின்னர் பொதுமக்கள் கட்டிடத்தை சுற்றி வளைத்ததால் அவர் தனது சொந்த துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் மரணம் தொடர்பில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் நீதித்துறை வைத்திய அதிகாரி (ஜேஎம்ஓ) நடத்திய பிரேத பரிசோதனையில் அவர் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதலுக்கு உள்ளானதன் காரணமாக பாரியளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எம்.பி.யின் மரணம் பல காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் உள் இரத்தப்போக்கு காரணமாக இருந்தது, ஆனால் அவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இல்லை” என்று கொழும்பு ஊடகமொன்று அறிக்கையை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது அவருடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலில் தோட்டா ஒன்று காணப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரியும் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும், இதனால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரோ தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், மாறாக கடுமையான தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் ஜேஎம்ஓ தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *