செம்மலை கடலில் காணாமல் போன மூன்றாவது நபரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு செம்மலை கடலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் காணாமல் போய் உயிரிழந்த நிலையில், மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக வருகைதந்த நிலையில், கடல் பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர் பந்து எடுக்க சென்ற நிலையில், அலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இரு சகோதர்களும் ஈடுபட்டுள்ளபோது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

அளம்பிலை சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன் (29) பத்மநாதன் விஜித் (26) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் கிராம மீனவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் கீழுள்ள மீனவ அமைப்புக்கள் இணைந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதை தொடர்ந்து, 11.05.2022 அன்று காலை 7.30 மணியளவில் 22 அகவையுடைய விழித்திரன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அன்று நண்பகல் 12.20 மணிக்கு 26 அகவையுடைய விஜித் என்பவரது சடலமும் மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மூன்றாவது நபரை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்ற போதும் அவரது சடலம் கிடைக்கவில்லை.

இதன்காரணமாக. மீட்கப்பட்ட இருவரது சடலங்களும், மூத்த சகோதரனுடைய புகைப்படம் தாங்கியவாறு இறுதிக் கிரியைகள் நேற்று (13) மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மூத்த சகோதரரான விஸ்வநாதனின் சடலம் குறித்த பகுதியில் உள்ள கற்பாறையில் சிக்குண்டு இருந்ததை மீனவர்கள் இன்று (14) கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது அவரது சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *