இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளினை முன்னிட்டு இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ் பேருந்து நிலைய வைரவர் கோவிலடியில் வைத்து வழங்கப்பட்டிருந்தது .
குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் வேலன் சுவாமிகளும் இணைந்து வழங்கி வைத்துள்ளார்.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் – வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டடிருந்தது.
இந்த துண்டுப்பிரசுரத்தினை வேலன் சுவாமிகள் வழங்கி வைத்திருந்தார்.
மேற்குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டவையாவன;
2009 தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட போரின் இறுதி மக்களின் நாட்கள் அவை . நாற்றிசையும் சூழ்ந்திருந்த இராணும் அப்பாவி மக்களின் தலைகளைச் சுட்டு சிதறடித்துக்கொண்டிருந்தது .
அதுபோதாதென்று ஏவப்பட்ட எறிகணைகள் – கொத்துக்குண்டுகள் மக்கள் மத்தியில் கொத்துக்கொத்தாடி வீழ்ந்துவெடித்தன .
பிணங்களும் , விழுப்புண்ணடைந்தோர் கொதிக்கும் குருதியுமாக முள்ளிவாய்க்கால் எனப்படும் ஈழ அவலநிலம் காட்சிதந்தது .
விடுதலையை அவாவிய ஒரு தேசத்தின் மக்களை மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது . பணத்திற்கு எந்த பெறுமதியும் இருக்கவில்லை . வாங்குவதற்கு எந்த உணவுப்பொருளும் இருக்கவில்லை.
இந்நிலையில்தான் , தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து , வன்னி பெருநிலப்பரப்பின் சொந்தக்காரர்களுக்கு அவர்தம் உயிர்பிழைப்புக்கென ‘ முள்ளிவாய்க்கால் கஞ்சி’ ஜீவாமிர்தத்தை அறிமுகப்படுத்தினர் .
நீரினுள் சிறிதளவு அரிசியையும் கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி உருவாக்கப்பட்டதே இவ்வுணவு .
சிறுவர்கள் , முதியவர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் வெறும் வயிற்றுடன் கஞ்சியினைப்பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர் .
இந்த காத்திருப்பின்போது கூட விமானத் கொத்துக்குண்டுகளாலும் தாக்குதல்களாலும் பல்லாயிரம் உயிர்கள் காவுவாங்கப்பட்டன .
காத்திருந்துகாத்திருந்து கையில் வாங்கிய கஞ்சியை , ஒரு மிடறு பருகி வயிற்றில் தாங்கிய சிசுவின் பசியாற்றுவதற்கு முன்பே வயிறு கிழிந்து , இரத்தம் பீறிட குடலும் கருவும் வெளிச்சிதறி மாண்டுபோன பேரவலங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியின் விரும்பத்தகாத சுவையாக எம் தலைமுறையின் நனவிலியில் பதிந்துள்ளது .
நீதிகேட்டுப் போராடும் எம்மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள்வரை ‘ முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பெருவலியாகவும் , அடையாளமாகவும் உணர்த்தப்படவேண்டியது எமது வரலாற்றுக்கடமையாகும் .
உணர்வுபூர்வமான இப்பெரும் மக்கள் எழுச்சியின் போராட்ட வழிமுறைகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வரலாற்றில் என்றும் நிலைத்தே நிற்கும் . என்பனவாகும்.




