
கொழும்பு,மே 14
அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் நடைபெற்றுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் ஒருமாதத்தை கடந்த நிலையிலும் தொடர்ந்து பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பிரதமராக பதவியேற்ற ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோட்டா கோ கோம் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படாது என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் தற்போது கோட்டா கோ கம போராட்ட தளத்தை பராமரிப்பதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, சிறிலங்கா இராணுவம் மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய பிரிவிற்கு கோட்டா கோ கம வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு பணித்துள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்டத் தளங்கள் மீது ஒடுக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.