மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வானூர்தி மூலம் ஆய்வு

மன்னார் வளைகுடா கடல் வழியாக தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால் இன்று வெள்ளிக்கிழமை (23) இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் வானூர்தி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இலங்கை இருப்பதால் தெற்கு கடற்கரையான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து கடல் அட்டைகள், சமையல் மஞ்சள், கடல் பல்லி, கடல் குதிரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக உரிய ஆவணங்கள் இன்றி சந்தேகநபர்கள் கடற்கரை வழியாக அவ்வப்போது தமிழகத்திற்குள் ஊடுருவி வருகின்றனர்.

இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் பாதுகாப்பு பணிக்காக பாம்பன் குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை ராமேஸ்வரம் வந்த இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் ஏ.பி சிங் ராமேஸ்வரம் கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு பாம்பன் அடுத்துள்ள குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கடற்படைக்கு சொந்தமான அதிநவீன ரோந்து கப்பல்களை பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து வானூர்தி (ஹெலிகாப்டர்) மூலம் மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் தீவுகளில் தாழ்வாக பறந்து கடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் உச்ச புளியில் உள்ள கடற்படைக்கு சொந்தமான பருந்து விமான தளத்திற்கு சென்று பாதுகாப்பு உயர் அதிகாரி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *