ஆரியகுளத்தில் வெசாக்கூடு அமைக்க அனுமதிக்குமாறு மிரட்டினார் ஆளுநர்!

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் வெசாக் கூடுகள் அமைப்பதற்கு இராணுவத்தினருக்கு உடனடியாக அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ். மாநகர சபையினரை மிரட்டியுள்ளார். அனுமதி வழங்கப்படாவிடின் பாரதூரமான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்ததாவது, இன்று (நேற்று) காலை 9.30 மணிக்கு இராணுவத்தினர் தொலைபேசியில் அழைப்பு எடுத்தனர்.

ஆரியகுளத்தில் வெசாக் கூடுகள் அமைப்பதற்கு அனுமதி கோரினர். ஆரியகுளத்தில் எந்தவொரு மதம்சார் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்குவதில்லை என்ற மாநகர சபையின் தீர்மானத்தை அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன்.
அதன் பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். அனுமதி வழங்காமை தொடர்பில் கேள்வியெழுப்பியதுடன், மாநகரசபையின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மாநகர சபை உறுப்பினர்களைக்கூட்டி முடிவு எடுக்குமாறும் அழுத்தம் பிரயோகித்தார்.

இதற்கு அமைவாக மாநகர சபை உறுப்பினர்களின் கூட்டம் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாலை 5 மணிக்கு கூட்டப்பட்டது. அதன் போது, வெசாக் நிகழ்வு முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. இறுதி நேரத்தில் அவர்கள் அழைப்பு எடுத்து அனுமதி கோரியதை ஏற்கமுடியாது. எழுத்துமூலக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் பரிசீலிக்கலாம் என்று உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த விடயத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்கவுள்ளோம், என்றார்.

இந்த விடயம் தொடர்பில் மாநகர சபையை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று அதிகாரிகளும் மறைமுகமாக மாநகரசபை உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தனர் என்று அறியமுடிகின்றது.
இதேவேளை ஆரியகுளத்தில் நேற்றைய தினம் வெசாக் பந்தல்களோ தோரணங்களோ அமைக்கப்படவில்லை என்பதும், விகாரைப்பகுதியிலேயே வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *