கல்முனை நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் நான்காம் நாள் அனுஷ்டிப்பினை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகரில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், க.கோடீஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் உள்ளிட்ட கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போத 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகள் துன்ப துயரங்கள் ரணங்களோடு சேர்த்து உண்ண உணவின்றி ஒரு வேளை உணவாக கஞ்சியை அருந்தியமையை நினைவு கூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

அத்துடன் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த அனைத்து உறவுகளுக்குமாக ஈகைச் சுடரேற்றப்பட்டு, அகவணக்கமும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *