
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதாலேயே ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரோஹினி கவிரத்ன நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளன.
எனினும் இந்தக் கூற்றுக்கு பதிலேதும் வழங்காமல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைதியாக அமர்ந்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்டன.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததோடு, அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ் முன்மொழிந்தார்.
இதனையடுத்து, வாக்கெடுப்பு இடம்பெறவிருந்த நிலையில், பணம் மற்றும் நேரத்தை வீணடிப்பதை விடுத்து, வாக்கெடுப்புக்கு செல்லாமல் ஒருவரை தெரிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விமல் வீரவன்ச மற்றும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின.
எவ்வாறிருப்பினும் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சபாநாயகர் தெரிவித்ததையடுத்து, தற்போது வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.