
கொழும்பு, மே 17
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படும் வேகம் குறித்து திருப்தியடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பான புதுப்பிப்புகளை சபையின் சபாநாயகருக்கு வழங்க பரிந்துரைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தாக்குதல்களை கண்டிப்பதாகவும், குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய அரசியல் அமைப்பு மற்றும் பாராளுமன்றத்திற்குள் நிலவும் உட்கட்சி மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்கள் பதில் கோரி வருவதாகத் தெரிவித்த பிரதமர், எனவே பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தற்போதைய பிரச்சினைகளுக்கு விடை காண தேசிய சபையொன்றை நியமிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இதன் போது வலியுறுத்தினார்.