
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அதன்பின்னர் போரின் இறுதி நாளான 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்படும்.
அதன்படி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதேநேரம், இனவிடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி என்ற தொனிப்பொருளில் பொத்துவில்லிலும் பொலிகண்டியிலும் ஆரம்பிக்கப்பட்ட நடை பவணிகள் இன்று முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.