
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கரீபியன் நாடான ஜமைக்காவுக்கு 4 நாள் பயணமாக கடந்த 15-ந் தேதி சென்றார். தலைநகர் கிங்ஸ்டன் விமான நிலையத்தில் அவரை அந்நாட்டு கவர்னர் ஜெனரல் சர் பேட்ரிக் ஆலன், பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் ஆகியோர் வரவேற்றனர்.
ஜமைக்காவுக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் செல்வது இதுவே முதல் முறை ஆகும். இந்தியா-ஜமைக்கா இடையே தூதரக உறவு தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அவரது பயணம் அமைந்துள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிங்ஸ்டனில் சட்ட மேதை அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்ட தெருவை திறந்து வைத்தார். டவர் தெரு என்ற தெருவின் ஒரு பகுதிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அம்பேத்கர் பெயர் சூட்ட கிங்ஸ்டன் மற்றும் செயின்ட் ஆன்ட்ரூ மாநகராட்சி சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, ‘டாக்டர் அம்பேத்கர் அவென்யூ’ என்ற பெயரிலான தெருவை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.