விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை – சபையில் பொன்சேகா

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தனது இருப்பிற்கு மக்களின் போராட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குல் மற்றும் அதனுடனான வன்முறை சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றிய அவர், விடுதலை புலிகளின் தாக்குதல் குறித்து தற்போது குறிப்பிடப்படும் செய்தி பொய்யானது என்றும் கூறினார்.

தேசிய பாதுகாப்பு குறித்து முறையற்ற விடயங்களை குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

தீவிரவாதிகள் தலைமறைவாகி இருந்த நாட்டில் தற்போது அரச தலைவர்கள் தலைமறைவாகி இருக்கின்றார்கள் என்றும் சரத் பொன்சேகா விமர்சித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *