கொழும்பு- காலிமுகத்திடலில் முதல்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போராட்டகாரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி கடந்த ஒரு மாத காலமாக காலிமுகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் இன, மத பேதமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆவது நினைவேந்தல் வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல இடங்களில் இன,மத பேதமின்றி நினைவேந்தல் இடம்பெற்று வருகின்றது.
அது மட்டுமன்றி நாடு கடந்தும் பல தேசங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இறுதிக்கட்டப்போரின் இனப்படுகொலையின் 13 ஆவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுடனும் கட்சிப் பிரமுகர்களுடன் உணர்வுபூர்வமாக கண்ணீர் ததும்ப உயிர் நீத்தவர்களுக்காக நினைவேந்தப்பட்டது.
இந்த நிலையிலேயே கொழும்பு- காலிமுகத்திடலில் போராட்டக்காரரின் ஏற்பாட்டில் சிங்கள சகோதரர்களின் பங்குபற்றுதலோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி அஞ்சலி செலுத்தினர்.