அரசியல்வாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு?

நாடளாவிய ரீதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 74 அரசியல்வாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்களை நாசப்படுத்தியதில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளுக்கு தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ், அரச புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த தாக்குதலின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிச கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகள் இத்தகைய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அலரிமாளிகைக்கு வருகை தந்திருந்த பேருந்துகளின் எண்கள் அனைத்தும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களது குழுக்களுக்கும் இடையே ‘டெலிகிராம்’ ஊடாக பரிமாறப்பட்டமை தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ள தகவல்கள் அடுத்த சில நாட்களில் அனைத்து ஆதாரங்களுடனும் முன்வைக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *