
நல்லாட்சிக் காலத்தில் அநியாயமாக அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடமைகளுக்கும், உயிர்களுக்கும் உரிய நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
அம்பாறை, அளுத்கம, கண்டி – திகண, மினுவாங்கொட, புத்தளம் போன்ற பிரதேசங்களில் திட்டமிட்ட அடிப்படையில் தூண்டப்பட்ட கலவரக்காரர்களால் எந்த ஒரு அடிப்படையும் இன்றி முஸ்லிம்களின் சொத்துக்களும் வாகனங்களும் உயிர்களும் அழிக்கப்பட்டன.
தற்போது பதவி ஏற்றிருக்கும் பிரதமர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக வாக்குகளை வழங்கிய குற்றத்திற்காகவே முஸ்லீம்கள் அவ்வாறு பழிவாங்கப்பட்டார்கள்.
இப் பாதக செயல்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக இருக்கும் இம்மக்களுக்கு உரிய நட்ட ஈடுகளை வழங்குவதனூடாக உங்கள் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கடதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

