காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளின் போது கடுமையான தாக்குதலுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த நபர் கடந்த 9 ஆம் திகதி பகல் பெரஹெர மாவத்தை – பிஷொப் கல்லூரி கேட்போர் கூட வளாகத்தின் நடைபாதையில் காயமடைந்து விழுந்த கிடந்த போது ஊடகவியலாளர்கள் சிலரால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிலவிய பதற்ற நிலைமையின் காரணமாகவே குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த 16 ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவரது பிரேத பரிசோதனைகள் நேற்றுமுன்தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய தலை மற்றும் மார்பகப்பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயமே இவரது உயிரிழப்பிற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பில் கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கொள்ளுபிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.