
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது திட்டமிடப்பட்ட தமிழ் இனப்படுகொலை என வலிமேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிமேற்கு பிரதேச சபையின் வருடாந்த கூட்டம் இன்றையதினம் பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ச.சுபாஜினி,
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை இடம்பெற்றதாக தீர்மானம் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்த நிலையில் சபையில் சமூகமளித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 03 உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவோடு இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ந.பொன்ராசா,
கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது தீக்கிரையாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் கடந்த பல மாதங்களாக வீட்டுத்திட்டத்திற்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டுவரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதை கண்டித்தார்.
இதேவேளை பிரதேச சபை உறுப்பினர் இதயகுமார் உரையாற்றும் போது,
முள்ளிவாய்க்கால் நினைவாக நினைவுதூபி அமைக்கப்பட்டு நினைவேந்தல்கள் நடாத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த தவிசாளர் முள்ளிவாய்க்கால் நினைவுதூபி அமைப்பது தொடர்பிலான சிக்கல்கள் குறித்து விளக்கமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.