
பாரிஸ், மே 19: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று 18ம் திகதி புலிகளின் பினாமி அமைப்பான பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்வலத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு அங்கே எடுத்து செல்லப்பட்ட புலிகள் அமைப்பின் கொடிகள் பொலிசாரால் அகற்றப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்ட றிப்பப்ளிக் (Republique) சதுக்கத்தில் இருந்த அந்த நாட்டின் தேசியக் கொடியை கீழிறக்கி விட்டு அந்த கம்பத்தில் புலிகள் அமைப்பின் கொடி ஏற்றப்பட்ட போது அங்கே கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அதனை தடுத்து ஏற்றப்பட்ட புலிக்கொடியை தரையிறக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன் தடைசெய்யப்பட்ட அமைப்பான புலிகள் அமைப்பின் கொடி ஊர்வலத்தில் எடுத்து செல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். .
இதன்போது பெரும் முறுகல் நிலை ஏற்பட்டு இறுதியில் அங்கிருந்தவர்களின் கைகளில் இருந்த அனைத்து புலிக்கொடிகளும் அகற்றப்பட்ட பின்னரே ஊர்வலம் நடாத்த அனுமதிக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
அங்கே ஏற்பட்ட குழப்பத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் அந்த நாட்டின் காவல்துறையை கடும் வார்த்தைகளால் திட்டி எச்சரிக்கை விடுத்த வேடிக்கையையும் அரங்கேற்றி உள்ளனர்.
ஒரு அந்நிய நாட்டில், நம்மவர்க்கு அடைக்கலம் கொடுத்த,இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் அந்த வல்லரசின் கொடியை கீழிறக்கி விட்டு,தடை செய்யப்பட்ட, பயங்கரவாத அமைப்பு என உலகால் முத்திரை குத்தப்பட்ட தமது எஜமானர்களின் கொடியை அந்த இடத்தில் ஏற்றி அந்த நாட்டு காவல் துறைக்கே எச்சரிக்கை விடுக்கிறார்கள் என்றால் இவர்களின் சிந்தனை மக்கள் பக்கம் இன்னமும் திரும்பவில்லை என்பதையே எடுத்தியம்புகிறது என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
மேலும், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு வழி சமைத்ததே இந்த கொடிதான் என்பதை இவர்கள் எப்பதான் உணர்வார்களோ என்று மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.