
கொழும்பு,மே 19
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு, காலி வீதியில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் இவ்வாறு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியை ஊடறுத்து பேராட்டத்தை முன்னெடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் அவர்கள் மீது இரண்டு தடவைகள் இவ்வாறு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் ஆயுதங்களுடன், பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல்வேறு வீதிகளிலும் உள்நுழைய அனைத்துப் பல்கலைக்கழகக மாணவர் ஒன்றியத்துக்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய யோர்க் வீதி, Chatham வீதி மற்றும் ஜனாதிபதி மாவத்தை ஆகிய வீதிகளில் பிரவேசிப்பதற்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கும் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்தது.
கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்துக்கு அருகாமையில் இருந்து பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்படுவதனை தடுக்கும் வகையிலான உத்தரவை பிறப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, உண்மை நிலைமைகளை பரிசீலித்து, குறித்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலையில், பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமெனக் குறிப்பிட்டு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவெல குறித்த கோரிக்கையினை நிராகரித்துள்ளார்.