திருமலையில் போர்க் கோழியை திருடி இறைச்சிக்காக வெட்டியவர் சிக்கினார்!

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டில் வளர்த்து வந்த போர்க் கோழியை திருடி இறைச்சிக்காக வெட்டிய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளதோடு, இவ்வாறு கைதானவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த முகம்மத் அரூஸ் (45) எனவும் தெரியவந்துள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் இருந்து 15,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்த போர்க் கோழி கடந்த இரண்டு நாட்களாக காணவில்லையென உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இம் முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த கோழியை திருடி இறைச்சிக்காக வெட்டிய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர் பக்கத்து வீட்டுக்கு சென்ற கோழியை திருடி சென்றதாகவும் அதற்கான பணத்தை வழங்குவதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இருந்தபோதிலும் குறித்த சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் பல குற்றச்சாட்டுகள் இருப்பதினால் பொலிஸார் பிணை வழங்க மறுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இன்று (20) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *