மன்னார் நகர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் குழப்பம்!

மன்னார் நகர பகுதியில் உள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் மக்களின் மோட்டார் வாகனங்களுக்கான எரிபொருள் (பெற்றோல்) வழங்கப்படாமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கையிருப்பில் காணப்பட்ட பெற்றோல் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்தது.

எனினும் மக்களுக்கு வழங்கப்பட வில்லை.அவசர தேவை கருதி மோட்டார் வாகனங்களில் எரி பொருளை பெற்றுக் கொள்ள (பெற்றோல்) சென்றவர்களுக்கு எரிபொருள் வழங்கவில்லை.

இதனால் அங்கு கூடிய மக்களுக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையாற்றுகின்றவர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.எனினும் அங்கு கூடிய மக்கள் எரிபொருளை கேட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் மக்களுடன் கலந்துரையாடியதுடன்,கையிருப்பில் உள்ள எரிபொருளை (பெற்றோல்) வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் வீதம் பெற்றோல் வழங்க நடவடிக்கைகளை  மேற்கொண்டார்.அதற்கு அமைவாக எரிபொருள் வழங்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் படையினருக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும்,மக்களாகிய தமக்கு அவசர போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பெற்றோல் கேட்ட போது வழங்காமையினால் குறித்த தர்க்க நிலை ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *