
2009ஆம் ஆண்டு இறுதிப்போரின்போது தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஏகமனதாக ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கனேடிய நாடாளுமன்றம்.
இதன்மூலம் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை ஏற்று அங்கீகரித்த உலகின் முதல் நாடாளுமன்றமாகக் கனேடிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
கனேடிய நாடாளுமன்றத்தின் நேற்றுமுன்தின அமர்வில் இது தொடர்பான பிரேரணையை கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி முன்வைத்தார். அவரின் பிரேரணை எதிர்ப்பு இல்லாமல் அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து இலங்கையில் 2009ஆம் ஆண்டு தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று முற்று முழுதுமாக ஏற்றுக்கொண்டது கனடா.
இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டமைக்கு அனைவரும் கரவொலி எழுப்பி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் என்றும் கனேடிய நாடாளுமன்றம் அறிவித்தது.