
கொழும்பு, மே 20
சமூக வலைதளங்கள் ஊடாக வன்முறைகளை தூண்ட உதவி ஒத்தாசை அளித்ததாக கூறி தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் உள்ளிட்ட மூவரை சி.ஐ.டி. யின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று ( 19) திக்வெல்லை, கங்கொடவில மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த மூவரையும் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த எந்தக் கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடந்து நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள், தீ வைப்புக்கள், சொத்து சேதப்படுத்தல் சம்பவங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இவ்வாறான தீ வைப்புக்கள், சொத்து சேதப்படுத்தல் சம்பவங்களுக்கு பல்வேறு சமூக ஊடக கணக்குகள் மற்றும் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறினார்.