இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான கனேடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுக்கும் இந்த தீர்மானத்திற்கும் முரண்பாடு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து கனடாவிற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் நிறைவிற்கு வந்து 13 ஆண்டுகளில் நல்லிணக்க முனைப்புக்களில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான அரசியல் நோக்கமுடைய சிறுபான்மை புலம்பெயர் சமூகத்தினர் மாத்திரமே இனவழிப்பு என்ற பதத்தை பயன்படுத்தி வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இனவழிப்பு இடம்பெற்றதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறவில்லை இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிழையான வழிகாட்டல்களுக்கு கனேடிய நாடாளுமன்றம் இடமளித்திருப்பது வருத்தமளிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *