கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் போலீசார் மற்றும் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற சம்பவத்தையடுத்து நேற்றிரவு(19) கரைச்சி பிரதேசசபை உறுப்பினரின் வர்த்தக நிலையத்தின் கதவுகள் பொருட்கள் என்பவற்றிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மருதங்குளம் மற்றும் உப்பாறு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக விவசாய நிலங்களிலும் விவசாய வீதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் தங்களுடைய பயிர் செய்கைகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு நேற்றைய தினம்(19) விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துமாறு கோரியிருந்தனர்.
இதனையடுத்து அவர்களது தொலைபேசிகளுக்கு அழைப்பெடுத்து அச்சுறுத்தல்களை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தெரியப்படுத்தியும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்றிரவு குறித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய மயில் வாகனம் நந்தகுமார் என்பவரின் வர்தக நிலையத்துக்கு முகத்தை மூடிக் கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் அவரது வர்த்தக நிலையத்தின் கதவு, தளபாடங்களை அடித்து சேதமாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் சீ.சீ ரீ கமரா மூலம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



