
கடந்த திறங்கள் கிழமை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட களத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் காரியாலயங்களும் தீக்கிரையாக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடும் சொத்தழிவுகளை ஏற்படுத்திய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தற்போது இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்விலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை அண்மைய வன்முறைச் சம்பவங்களினால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவதில் தாம் ஆட்சேபிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதேவேளை அமைதியான முறையில் கோதா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அதன் பின்னர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் ஒருவருக்கு ஒருவர் பணப்பட்டுவாடா செய்யப்படாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.