
கொழும்பு,மே 20
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடமிருந்து அமைச்சு நியமனத்தைப் பெற்றுக் கொள்ளும்போது எரிச்சல் உணர்வுக்கு அப்பால் அருவருப்பாக உணர்ந்தேன். பதவியேற்கும் போது ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. மறுபுறம் திரும்பிக் கொண்டு பதவியை ஏற்றதனாலேயே புகைப்படம் கூட எடுக்கவில்லை என்று சுற்றாடற்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பொருளாதாரப் புயலில் சிக்கிக் கொண்டிருக்கும் கப்பலை பாதுகாப்பாக கரை சேர்க்கும் சவாலை ஏற்பதற்கு எமது தலைவர் சஜித் பிரேமதாச தயாராக இல்லை.
எனவேதான் அந்த சவாலை ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தோம். அதனை விடுத்து அவரின் காலை வாரும் நோக்கமோ , கப்பல் முழுமையாக கடலில் மூழ்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கொள்கையோ எமக்கு கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றாடல்துறை அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்தார்.

