பெண்களின் திருமண வயதை உயர்த்த எதிர்ப்பு

இந்தியா,மே 20

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு இந்திய குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் நோக்கில் குழந்தைத் திருமண மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில்,பாஜக எம்.பி வினய் சஹஸ்ரபுத்தேதலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்களும் அமைப்புகளும் மசோதா குறித்த தங்கள் கருத்துக்களை நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பின்பேரில், பல்வேறு அமைப்புகள் தங்கள் கருத்துக்களை நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளன. இந்த கருத்துக்களைப் பரிசீலிக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு, மசோதா குறித்த தனது அறிக்கையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்க உள்ளது.

இந்நிலையில், நோபல் பரிசுபெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் அமைப்பு உள்ளிட்ட சுமார் 70 அமைப்புகளின் கூட்டமைப்பான இந்திய குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அதில்,பெண்களின் திருமண வயதை18ல் இருந்து 21 ஆக உயர்த்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்துவதன் மூலம் 21 வயதுக்குள்ளாக திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், குறிப்பாக பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் குற்றவாளிகளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்த குழந்தைத் திருமணச் சட்டம் 2005 தோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள இந்திய குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, 2019 – 2021ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5ன் படி, 23.3 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், தேசிய குற்ற ஆவணத்தின் பதிவுகளில், குழந்தைத் திருமணச் சட்டத்தின் கீழ் 2016 முதல் 2020 வரை 2,530 வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்திற்குப் பதிலாக, பெண்களுக்கு கல்வி எளிதாகக் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கல்வி எளிதாகவும் செலவு இல்லாததாகவும் இருக்குமானால், அதுவே அவர்களின் திருமண வயதை தள்ளிப்போடும் என்றும் இந்திய குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு ஏற்ப தற்போதுள்ள கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து கல்வி உரிமைக்கான வயதை 14ல் இருந்து 18 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *