
பெளத்த தேரர்கள்தான் இலங்கையில் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டனியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
“நாட்டில் நிலவும் நெருக்கடி ஊடாக மாற்றம் வருகிறது. அதன் போது, நமது வரலாற்று நெருக்கடிகளையும் அரங்கத்தில் சொல்லத் துணி, சொல்லி விடு. அப்போதுதான் அந்த மாற்றத்தில் நமக்கும் நலம் இருக்கும்..” என்று வரலாறு என் காதில் சொல்கிறது.
இன்று நான் சொன்னதை, ஆறு மாதத்திற்கு முன் சொல்லி இருந்தால், என்னை சபையில் பேச விட்டிருக்க மாட்டார்கள்.
நாட்டுக்குள்ளே தேரர்கள் என்னை நடமாட விட்டிருக்கவும் மாட்டார்கள். “மதசார்பின்மை” என்பது “மத எதிர்ப்பு” அல்ல. “அரசு” என்பது “மதம்” சார்ந்து இருக்க கூடாது என்பதுதான் என் கொள்கை.
மதத்தலைவர்கள், தமது “விசேட அந்தஸ்த்தை” துஷ்பிரயோகம் செய்து, மத அடையாளங்களை முன்னிறுத்தி, அரசியல் கருத்துகளை கூறி, மத நம்பிக்கையாளரான வாக்காளர்களை பிழையாக வழி நடத்தி, ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும், கலாச்சாரம் இனி முடிவுக்கு வர வேண்டும்.
பெளத்த தேரர்கள்தான் இலங்கையில் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.
ஆனால், இதை இப்படி காரமாகவே சொல்ல எந்தவொரு சிங்கள பெளத்த எம்பியும் முன்வராததால், நானே இதை சொல்ல வேண்டி ஏற்பட்டது. பிறப்பால் வந்த எனது இன அடையாளம் காரணமாக நான் சொல்லும் கருத்து திசை திருப்பப்படுவதை தவிர்க்க, அனைத்து மத தலைவர்களையும் பொதுவாக என் சிங்கள உரையில் குறிப்பிட்டேன்.
எனினும் மதமும், மத தலைவர்களும் அரசியல்/அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்புறக்கூடாது என்பது பெளத்தத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.