
கொழும்பு,மே 22
உலகின் பல நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள மற்றும் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி அறிவியல் மற்றும் உயிரணு ஆய்வு நிறுவகத்தில் அது தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று அடையாளம் காணப்பட்டது. அந்த நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு லண்டன் நகரில் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும், மற்றும் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் தொற்று தீவிரமடைந்துள்ளது.
இதுவரையில், ஐரோப்பாவில் 80க்கும் அதிக குரங்கு அம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

