
கொழும்பு,மே 22
பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை. யாழில் கூட இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றன. எனவே நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு இடையூறின்றி பரீட்சைகளை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அத்துடன் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு அத்தியாவசிய சேவை கடிதத்தை வழங்குமாறு பிரதேச செயலகங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதம், தொழில் அடையாளஅட்டை, பரீட்சை கடமை கடிதம் மற்றும் மாணவர்களாயின் அவர்களது பரீட்சை அனுமதி அட்டை என்பவற்றைக் கொண்டு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

