காலம் சற்று தாழ்த்தினாலும் வினாத்தாள்களை வழங்குங்கள்: எல்.எம்.டீ.தர்மசேன

கொழும்பு,மே 22

பரீட்சைகள் சட்டத்துக்கமைய பரீட்சை ஆரம்பமாகி அரை மணித்தியாலம் தாமதமாகி வரும் மாணவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குவது வழமையாகும்.

எனினும் இம்முறை நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சைகள் ஆரம்பமாகி அரை மணித்தியாலத்துக்கும் மேலதிகமாக கால தாமதமாகி வருகை தந்தாலும் அவர்களுக்கு வினாத்தாள்களை வழங்குமாறு பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

தாமதமாகி வரும் மாணவர்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களத்துக்கு அறிவித்து, அதன் பின்னர் அவர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்குமாறும் பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இம்முறை வழமைக்கு மாறானதொரு சூழலில் பரீட்சைகள் இடம்பெறுகின்றமையால் பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோரையும், மாணவர்களையும் குறித்த நேரத்துக்கு முன்னரே பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏதேனுமொரு காரணத்துக்காக மாணவர்கள் கால தாமதமாக பரீட்சை மண்டபத்துக்கு வருகை தந்தால் அவர்களை திருப்பி அனுப்பாது பரீட்சையை எழுதுவதற்கு அனுமதிக்குமாறு சகல அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மாணவிகள் வழமையை போன்ற தமது சீருடையை அணிந்து செல்ல முடியும். மாறாக முகத்தையும் முழுமையாக மறைக்கும் வகையிலான சீருடையை அணிந்து சென்றால் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *