![](https://i0.wp.com/newuthayan.com/wp-content/uploads/2021/09/1631536222-1631535902-mena_l-1.jpg?fit=650%2C433&ssl=1)
மன்னார் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் ஒரு வாக்கு வித்தியாசத்தால் மன்னார் பிரதேச சபை தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனினும், குறித்த தெரிவு, வர்த்தமானியில் வெளியிடுவதைத் தடுத்துநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அந்தப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும்போது குற்றங்கள் புரிந்துள்ளார் என்ற அடிப்படையில் கடந்த 14ஆம் திகதி தொடக்கம் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் பதவியையும் உறுப்பினர் பதவியையும் வடக்கு ஆளுநர் நீக்கியிருந்தார்.
அதனை ஆட்சேபித்து முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில், மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நேற்று நடைபெற்றது.
எனினும் மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை நிறுத்துமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்று நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், நேற்றுமுற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் தெரிவு நடைபெற்றது. சபையின் 21 உறுப்பினர்களில் ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் 20 உறுப்பினர்கள் மத்தியில் தவிசாளருக்கான தேர்தல் நடைபெற்றது.
மூவர் போட்டி
இந்தத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேசாலை உறுப்பினர் ஜே.ஈ.கொன்சன் குலாஸூம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரிஸும் தவிசாள ருக்கான போட்டியில் இறங்கியிருந்தனர். இதில் முதல் சுற்றில் நடைபெற்ற திறந்த போட்டியில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் 09 வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேசாலை உறுப்பினர் ஜே.ஈ.கொன்சன் குலாஸ் 08 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த என்.செபமாலை பீரிஸ் 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இரண்டாம் சுற்று
இதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேசாலை உறுப்பினர் ஜே.ஈ.கொன்சன் குலாஸூக்கும் இடையே நடைபெற்றது.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 06 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஓர் உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஓர் உறுப்பினரும் ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் ஓர் உறுப்பினரும் வாக்களித்ததில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீனுக்கு 09 வாக்குகள் கிடைத்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 07 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரும் வாக்களித்ததில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பேசாலை உறுப்பினர் ஜே.ஈ.கொன்சன் குலாஸூக்கு 08 வாக்குகளும் கிடைத்தன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சார்ந்த ஓர் உறுப்பினரும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த 02 உறுப்பினர்களும் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எருக்கலம்பிட்டி உறுப்பினர் எம்.ஐ.எம். இஸதீன் 09 வாக்குகள் பெற்று ஒரு மேலதிக வாக்கால் மன்னார் பிரதேச சபைத் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
இந்தத் தேர்தலின்போது மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் தவிர ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கு வந்திருந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட அரசியல்வாதிகள் எவரும் தேர்தல் முடியும்வரை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.அத்துடன் மன்னார் பிரதேச சபையைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.