
கொழும்பு, மே 23
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குழாமினரின் நலன் கருதி அதிகளவான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் விசேட பஸ் சேவைகளும் இன்று முதல் இடம்பெறவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், இன்று முதல் நாளாந்தம் 8,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திட்டமிடப்பட்ட நேர அட்டவணைக்கு அமைய சகல ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடி சூழலில் குறித்த பரீட்சையினை தடையின்றி நடத்தி செல்வதற்காக பரீட்சை பணிக்குழாமினர் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதியளிக்குமாறு பொதுமக்களிடம் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

