தமிழ் நாட்டு உறவுகளுக்கு நன்றி தெரிவித்த செல்வம் எம்.பி!

தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த செயல்பாட்டுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர்  தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
-மன்னாரில் இன்று (23) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 கனேடிய நாட்டின் பாராளுமன்றத்தில்  எங்களுடைய மே 18 நாளை இனப்படுகொலை நாளாக அந்த வார்த்தை அனுஷ்டிப்பதற்கு  கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இதற்காக பாடுபட்ட   ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு நன்றி .அவர் இந்த விடயத்தில் பாரிய முனைப்பு காட்டியது இட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த செயல்பாடானது  எங்களுடைய நாட்டிலும் பிரதேச சபை நகர சபை போன்ற இடங்களில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக நான் முன்வைக்கிறேன்.

அதேபோல் கனேடிய  நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிக்கிறேன்.

 அத்துடன்  நேற்றைய தினம் தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அரிசி, பால் மா ,மருந்து பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

 இந்த செயல்பாட்டுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர்  தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 மேலும் தமிழ்நாட்டில்  ஒரு சிறுமி தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக  சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கியிருந்தார். அதேபோல் தேநீர் கடை நடத்தும் ஒரு நபர் தான் வழங்கும் தேநீ ரை கொடுத்து தேனீரை பெற்றுக் கொள்பவர் தங்களால் முடிந்த அளவு இலங்கை மக்களுக்கு வழங்கும் பணத்தினை இலங்கை மக்களுக்கு  அனுப்ப உள்ளார்.

 அதேபோல் அன்றாடம் யாசகம் பெறும் ஒரு முதியவர் கூட தன்னுடைய பணத்தை எங்களுடைய மக்களுக்கு வழங்குவதற்கு முன் வந்திருந்தார்.

இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆன தொப்புள் கொடி உறவு என்பது.
 அதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே தமிழ்நாட்டு மக்களும் இலங்கை தமிழ் மக்களும் ஏற்படும்  சிறுசிறு முரண்பாடுகளை பெரிதாக்காமல் எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஒரு வேண்டுகோளாக இருக்கின்றது.

 அதேபோல் அகதி முகாம்களில் இருக்கும் எங்களுடைய மக்களை இன்றும் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அந்த செயற்பாடுகளையும் எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. 

அந்த வகையில் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து தமிழக மக்களுக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாகவும் எனது கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 மேலும் எங்களுடைய வன்னி மாவட்டத்தில் குறிப்பாக கடல் தொழிலாளர்கள்  விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள்  பிரச்சனை பாரிய பிரச்சினையாக இருக்கிறது. மண்ணெண்ணெய்  இல்லாத சூழலில் அவர்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது.

அவற்றை சீர் செய்யுமாறு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். முதன்மை அடிப்படையில் எங்களுடைய விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும்  மண்ணெண்ணெய் டீசல் வழங்க வேண்டும் என்று பேசியிருந்தோம்.
 இப்போது இருக்கும் அமைச்சர் அவர்கள்  விரைவாக சீர் செய்வதாக கூறிய போதும் அவை சரியான முறையில் சீர் செய்யப்படவில்லை  என்பது மக்களின் குற்றச்சாட்டு.

 இன்றைக்கும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு இருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் எங்களுடைய மீனவர்கள்  விவசாயிகளின்  உழைப்பு வருமானம் பாதிக்கப்படும் ஒரு செயல்பாடாக இவை இருக்கின்றது.

 ஆகவே அரசாங்கம் பெட்ரோல் டீசலுக்கு காட்டுகின்ற முனைப்பை போலவே மண்ணெண்ணைக்கும்  துரித கதியில் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை  முன் வைக்கின்றோம்.

அரசாங்கம் சொல்கிறது கேஸ், பெட்ரோல், டீசல் ,இனிமேல் தாராளமாக கிடைக்கும் என்று.

 ஆனால் இப் பொழுதும் மக்கள் இரவிரவாக வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி இந்த மக்களுடைய பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை  கேட்டு நிற்கின்றோம்   என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *